தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தீவிர வன்முறை காரணமாக 460 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் (UNICEF) பகீர் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆப்கனில் கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குண்டுஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது.
மேலும், இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து வரும் தொடர் வன்முறையால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தன்னிடம் அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது ஃபாஹிம் என்பவர் கூறியுள்ளார்.
ஆப்கனில், குண்டுவெடிப்பு, வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து கூறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் உயிரிழப்பதாக யுனிசெப் கூறுகிறது.