அமெரிக்கா:
கொரோனா பாதிப்பில் இருந்து உலக மக்கள் இன்னும் மீளாத நிலையில், அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபா ஒன்று சிறுவனின் உயிரைப் பறித்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஜோசியா என்ற 6 வயது சிறுவன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். மேற்கொண்ட பரிசோதனை அறிக்கையில் அச்சிறுவன் மூளையை உண்ணும் அமீபாவால் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
பொதுவாக இவ்வகை அமீபாக்கள் தூய நீரில் தான் வாழுமாம். இந்த தண்ணீர் மூலம் உடலுக்குள் செல்லும் அமீபாவானது மூளையைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இது உடலுக்குள் நுழைந்தால் ஒற்றைத் தலைவலி, கழுத்து வலி, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அச்சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல பகுதிகளிலும் இந்த அமீபா இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த மாகாண மக்கள் குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என்றும், நீரை கொதிக்க வைத்து பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பேரிடராக அறிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. இந்த அமீபாவிற்கு கடந்த 37 ஆண்டுகளில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.