ஆப்கனில் மோதல் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக குழந்தைகளின் நிலை மோசமாக இருப்பதாக ஐ.நா., குழந்தைகள் நிதியம் யுனிசெப் வேதனை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. தாங்கள், மனம் மாறிவிட்டதாகவும் அடக்குமுறையைக் கையாள மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் தலிபான்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காத அந்நாட்டு மக்கள், உயிர் பிழைத்தால் போதும் என, அண்டை நாடுகளுக்கு தப்பியோடுகின்றனர்.
ஆப்கனில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையால் பெரியவர்களே அல்லாடி கொண்டிருக்கும் வேளையில் சிறுவர், சிறுமியர்களின் நிலை மிகவும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது. அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற வருத்தம் ஐ.நா., சபையை தொற்றிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கனில் ஆய்வு செய்த, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் நிதியமான யுனிசெஃப் தெற்காசியாவின் இயக்குனர் ஜார்ஜ் லாரியா அட்ஜே கூறியதாவது:-
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் வறட்சி ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழல் பாதுகாப்பின்மையும் வறட்சியை மேலும் அதிகரித்திருக்கிறது. விலைவாசி கடுமையாக ஏறிக் கொண்டிருக்கிறது.
மக்கள் அன்றாட வாழ்வை கழிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பதில்லை. பாதுகாப்பு நெருக்கடி, உணவுப் பொருட்கள் விலை உயர்வு, கடுமையான வறட்சி, கோவிட் பரவல், எதிர்வரும் கடுமையான குளிர்காலம் என, குழந்தைகள் முன்னெப்போதையும் விட அதிக ஆபத்தில் உள்ளனர். அனைத்து குழந்தைகளும் மிகுந்த அச்ச உணர்வுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மன ரீதியான ஆதரவு தேவை.
தற்போதைய நிலை தொடர்ந்தால், ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட 10 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ள நேரிடும். அது போன்று 22 லட்சம் பெண் குழந்தைகள் உள்பட 40 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படும்.
இத்தகைய இக்கட்டான சூழலில் தலிபான்கள் மீதான அச்சம் காரணமாக சிறுவர்களின் நலனுக்காக நிதி அனுப்பும் அமைப்புகள் நிதியை நிறுத்துகின்றன. ஆனால் உலக நாடுகள் ஒருபோதும் ஆப்கன் சிறுவர்களைக் கைவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.