அமெரிக்கா:
தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐ.நா.சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வந்தார். தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாகவும், உலக அளவில் காற்று மாசுவை குறைக்க தான் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.
டொனால்டு டிரம்பை தோற்கடித்து ஜோபிடன் அமெரிக்காவின் 46-வது அதிபரானார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோபிடன் அறிவித்தார்.இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.