கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக இருப்பதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விமான சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், லண்டனில் உள்ள தன் பாட்டியை பார்க்கவேண்டும் என்பதற்காக 2 மாதம் நடந்தே சென்றுள்ளான் 10 வயது சிறுவன் ஒருவன்.
சிசிலியின் பாலெர்மோ பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ரோமியோ காக்ஸ்.அவருடைய பாட்டி லண்டனில் உள்ளார். ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிற்குள்ளேயே இருந்த ரோமியோவிற்கு திடீரென தன் பாட்டியை பார்க்கவேண்டும் என்று தோன்றியுள்ளது. விமான சேவை இல்லாததால் தன் பாட்டியை நடந்தே சென்று பார்க்க முடிவெடுத்துள்ளார் ரோமியோ. முதலில் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்தபோது அவர்கள் மறுத்துள்ளனர். பின்னர், ரோமியோவின் தந்தை பில்லும் அவருடன் இணைந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
இருவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு கடந்த ஜூன் 10ம் தேதி சிசிலியில் இருந்து கிளம்பியுள்ளனர். கடந்த 2 மாத காலமாக சுமார் 2800 கிமீ நடந்து செப்டம்பர் 21ம் தேதி லண்டனை அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளைக் கடந்து லண்டன் சென்றடைந்துள்ளனர். தன் மகனின் புதிய முயற்சியை ஊக்குவிப்பதற்காக பிரத்யேகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கியுள்ளார் பில்.
அதில், அவர்கள் இருவரின் பயணம் குறித்த தகவல்களை பதிவேற்றம் செய்துவந்துள்ளனர். இதுக்குறித்து ரோமியோ பேசியபோது, “நாங்கள் ஜூன் மாதம் கிளம்பினோம். அப்போது லண்டனுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் என்னுடைய பெற்றோரிடம் கேட்டபோது 50 முறைக்கு மேல் வேண்டாம் என்று கூறிவிட்டனர். பின்னர் என் தந்தை ஒப்புக்கொண்டார். அவரும் என்னுடன் வந்தார். இது எனக்கு மிகவும் வித்தியாசமான பயணமாக உள்ளது. எங்களது இவ்வளவு கஷ்டம் என் பாட்டியை ஒருமுறை கட்டிப்பிடித்தால் சரியாகிவிடும்.” என்று கூறியுள்ளார்.
செப்டம்பர் 21ம் தேதி அவர்கள் லண்டன் சென்றடைந்ததை அடுத்து, தற்போது தனிமைப்படுத்திவைக்கப்பட்டுள்ளனர். கூடிய விரைவில் ரோமியோ அவரது பாட்டியைப் பார்த்துவிடுவார் என்று அவரது தந்தை பில் உறுதியாக தெரிவித்துள்ளார்.