கொழும்பு:-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்-ன் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அரச மரியாதையுடன் இன்று மாலை 05.55 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த 26 ஆம் தேதி மரணமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உடல் அஞ்சலிக்காக பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டது.
பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் அங்கிருந்து பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமை அலுவலகமான சௌமிய பவனில் வைக்கப்பட்டது.
அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து நுவரெலியா, தலவாக்கலை வழியாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.க அலுவலகமான CLFல் வைக்கப்பட்டது.
அங்கிருந்து பலத்த பாதுகாப்போடு இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு ஆறுமுகன் தொண்டமானின் உடலுக்கு பெருந்திரளான மக்கள் வீதியின் இருபுறங்களிலும் நின்று மலர்தூவி கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அஞ்சலி உரை நிகழ்த்திய பின்னர் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் சகல அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி, இரங்கல் உரை நிகழ்த்தினர்.
அமைச்சர்கள் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கிம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக முன்னாள் அமைச்சர் வி.இராதகிருஸ்ணன், முன்னாள் அமைச்சர்களான நிமால் சிரிபால டி சில்வா, விமல்வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜி.எ.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், நவீன் திசாநாயக்க, சி.பி ரத்நாயக்க நாமல் ராஜபக்ஷ, மற்றும் மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க, முன்னாள் மத்தியமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தலைவர்கள், உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், சிவனொளிபாதமலை பிரதான தேரர், மற்றும் இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே ஆறுமுகம் தொண்டமானின் உடலிற்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.