ரோம் :
ஐரோப்பிய நாடான இத்தாலி தலைநகர் ரோமில் ‘ஜி 20’ அமைப்பு நாடுகளின் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய நாட்டின் பிரதமர் மோடியும் பங்கேற்றார் .
உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய கொரோனா தொற்று சம்பந்தமாகவும் இடம்பெற்றிருந்தன. கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து ஜி20 நாட்டுத் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய ஜி20 குழுவில் சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் ஆகிய இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி வழியாக கலந்து கொண்டார்கள்..
பெருநிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதமாவது வரி விதிக்கும் ஒப்பந்தம் முன்மொழியப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைவான வரி விதிக்கும் நாடுகளுக்கு திசை திருப்பிவிடும் பிரச்சனையைத் தொடர்ந்து இப்படி ஒரு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அமெரிக்கா நாடு முன்மொழிந்த இந்த வரி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகாரபூர்வமாக பின்பற்றப்படும் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக பொருளாதாரத்துக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒரு “முக்கிய தருணம்” என்றும், “குறைவாக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடும் கார்ப்பரேட் வரி பிரச்சனையை குறைக்கும்” என்றும் அமெரிக்க கருவூல செயலர் ஜனெட் யெல்லன் கூறினார்.
பல அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் அதிகம் வரி செலுத்த வேண்டி இருந்தாலும், அமெரிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வரி ஒப்பந்தத்தின் மூலம் பலனடைவார்கள் என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.