ரோம் :
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில் இம்மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டின் நிகழ்வுகள் மற்றும் விவாதங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பின்கண்டவாறு பதிவிட்டுள்ளார். ஜி20 உச்சி மாநாட்டு மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு அமர்வுகளின் விவாதங்களில் நான் பங்கேற்றேன். சர்வதேச நலன்களுக்காக முக்கியமான நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அதுபோன்று கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான உலகளாவியப் போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பை விவரித்தேன்.
குறிப்பாக இந்தியாவின் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் என்ற கோட்பாடு கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியதையும் விவரித்தேன் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியா 100 கோடிக்கும் அதிகமானாருக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருக்கிறது. அத்துடன் 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.