கேன்பரா:-
ஆஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரெய்க் கெல்லி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் முன்னணி ஊடகங்கள் , கொரோனா இரண்டாவது அலையை இந்தியா கையாண்ட விதத்தை கடுமையாக விமர்சித்தன.
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்கள் எரியூட்ட இடம் இல்லாமல், கங்கை ஆற்றுப் படுகைகளில் மிதக்கவிடப்பட்டது, எங்கு பார்த்தாலும் பிணங்கள் எரிந்தது என கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில், கொரோனா தொற்றை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கட்டுப்படுத்தியதை, ஆஸ்திரேலியா எம்.பி. கிரெய்க் கெல்லி வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
இந்த பேரிடரை முறையாகக் கையாண்ட யோகி ஆதித்யநாத்திற்கு எனது வாழ்த்துகள். இதேபோல், எங்கள் நாட்டிற்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவ, முடிந்தால் நாங்கள் உங்கள் உதவியை பெற்றுக் கொள்வோம் எனத் தனது தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, யோகி அரசு, “ஐவர்மெக்டின்” மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததைக் ஆஸ்திரேலிய எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் “ஐவர்மெக்டின்” மருந்தைப் பரிசோதனைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்கைகாக இதைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.