டாக்கா:-
பங்களாதேஷில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா நெகட்டிவ் என்று போலியாக சான்று அளித்து நோய் பரவக் காரணமான தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் ஒருவர் புர்கா அணிந்து இந்தியாவிற்கு தப்ப முயன்ற போது அந்நாட்டு போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பங்களாதேஷ் நாட்டில் 1 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2457 பேர் உயிரிழந்துள்ளனர். நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்துவந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்தது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மருத்துவமனை நடத்தி வந்தவர் பிரபல மருத்துவர் முகமது ஷாகித் (42). இவரது இரு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் டாக்காவில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி அவர்களுக்கு கொரோனா இல்லை நெகட்டிவ் என்று முகமது ஷாகித் சான்றிதழ் வழங்கி வந்ததாக கூறப்படுகின்றது.
அவரது மருத்துவமனைகளில் இதுவரை 10,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 4200 பேருக்கு சரியான சான்றிதழ் வழங்கியுள்ளார், 6300 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்று பொய்யான தகவலை குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்காக அவர் லட்சக்கணக்கில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக சிறப்பு அதிரடிப்படை கர்னல் ஆஷிக் பில்லா (Colonel Ashique Billah) கூறுகையில்:-
டாக்காவில் இருந்து வெளி நாடுகளுக்கு விமானம் மூலம் சென்ற ஏராளமானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாக எங்கள் நாட்டு தூதரகத்துக்கு தகவல் வந்தது. இதனால் பல நாடுகள் பங்களாதேஷ் விமானங்களை தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்தன.
இதையடுத்து வெளிநாடு சென்ற நபர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் பெரும்பாலானவர்கள் முகமது ஷஹித்தின் மருத்துவமனையில் சான்று பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உள்நாட்டில் மட்டுமல்லாமல் பங்களாதேஷில் இருந்து வெளி நாட்டிற்கும் கொரோனா நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சில நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்திய எல்லையில் பெண் போல புர்கா அணிந்து கொண்டு இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் நதிக்கரை ஓரமாக இந்தியாவிற்குள் தப்ப முயன்ற முகமது ஷாஹீத்தை அந்நாட்டு சிறப்பு அதிரடிப்படை போலீசார் (Rapid Action Battalion) அதிரடியாக கைது செய்தனர். அவரை சர்வதேச டான் போல கையில் விலங்கிட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
முகம்மது ஷாகித் மட்டுமல்லாது டாக்காவில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரும் மருத்துவரும் அவரது கணவரும் இந்தப் போலி கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரது கொடிய பணத்தாசையால் டாக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் மூலம் கொரோனா பரவியுள்ளது. இது போன்ற கொடிய நபர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.