பிரேசிலியா:-
பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், அவ்வாறு அவர் செல்லாவிட்டால் நாள்தோறும் 2000 Reais (387 டாலர்/ 310 பவுண்ட்) அபராதம் செலுத்த வேண்டும் என்று ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது, மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் தான் பிரேசில் நாட்டு அதிபரான ஜேர் போல்சோனாரோ.
இந்நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் எதையும் பிரேசில் அதிபர் போல்சோனாரோ மதிப்பதில்லை. மேலும் பொது இடங்களில் அவரும் வருகை தரும்பொழுது அங்கு கூடியிருக்கும் மக்களுடன் கைகுலுக்குவது சமூக விலகலை துளியும் பின்பற்றாமல் அவர்களுடன் இணைந்து நிற்பது என்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி ரெனாட்டோ கோல்ஹோ போர்லி (Renato Coelho Borelli) பிறப்பித்த உத்தரவில்:-
அதிபர் போல்சோனாரோ வெளியிடங்களுக்குச் சென்று மக்களுடன் பேசும்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் அவ்வாறு நடந்தால் அது நாட்டில் பெரிய குழப்பத்தை விளைவிக்கும்.
அதிபர் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தடுக்க முடியாது. ஆனால் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 2000 ரீஸ் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் அதிபருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிடுவது இதுதான் முதல்முறையாகும். நீதிபதியின் இந்த உத்தரவிற்கு இதுவரையில் அதிபர் போல்சோனாரோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மார்ச் மாதத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு போல்சோனாரோ ஒப்புக் கொள்ளவில்லை. பின்னர் அவருக்கு மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் நெகட்டிவ் என்று வந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அதிபர் போல்சனாரோ மட்டுமல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மேனுல் லோபஸ் ஓப்ரடார், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்ட் பெர்னான்டஸ் ஆகியோர் வெளியே செல்லும் போது முககவசம் அணியால் ஆதரவாளர்களிடம் பேசுவதும், செல்பி எடுப்பதுமாக இருக்கிறார்கள்.
சிறிய துணியை கொண்டு முகத்தை மூடாவிட்டால் பெரிய துணியை கொண்டு உடலை மூட வேண்டியிருக்கும் என்பது பலருக்கு புரிவதில்லை.
பிரேசிலில் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.