ஒட்டாவா:-
சீக்கியர்களுக்குத் தனிநாடு கோரி சீக்கிய அமைப்பு நடத்தும் பொது வாக்கெடுப்பை அனுமதிக்க போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs For Justice) என்னும் அமைப்பு இந்தியாவில் இருந்து பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் (Khalistan) தனி நாடு கோருவது குறித்து வெளிநாடுவாழ் சீக்கியர்களிடம் வரும் நவம்பரில் பொது வாக்கெடுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்:-
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கிறோம், எனவே சீக்கியர்களின் இந்த பொதுவாக்கெடுப்பை (Referendum) கனடா ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் கூறியுள்ளது. கனடா அரசாங்கத்தின் இந்த முடிவை பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமர்சிங் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்:-
காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் இந்த பொது வாக்கெடுப்பு 2020க்கு கனடா அனுமதி மறுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் இதனையே மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இதுபோன்ற செயல்கள் இந்தியாவை வகுப்புவாத (Communalism) அடிப்படையில் துண்டாடிவிடும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.