பீஜிங்:
மத்திய ராணுவ ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், ராணுவ பயிற்சிகள் நிஜமான போரை போன்று இருக்க வேண்டும். எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் மத்திய ராணுவ ஆணையம் என்பது 20 லட்சம் வீரர்களை கொண்ட ராணுவத்தின் தலைமை அமைப்பு. இதன் தலைவராக அந்நாட்டின் அதிபரே உள்ளார். நேற்று அவ்வமைப்பின் கூட்டத்தில் ஜி ஜின்பிங் போர்களை வெல்லும் திறனை அதிகரிக்க வேண்டும் என அதிரடி உத்தரவினை பிறப்பித்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாவது, “புதிய வகை ராணுவ பயிற்சி முறையை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிய சகாப்தத்திற்கு ஏற்ப வலுவான ஆயுதப் படைகளை உருவாக்க வேண்டும். அவை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். கட்சியின் இந்த இலக்கிற்கு வலுவான ஒத்துழைப்பு தேவை. ராணுவப் பயிற்சி என்பது ராணுவத்தின் வழக்கமான பணிகளின் மையப்புள்ளி. பயிற்சியே போர் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறை. ராணுவம் தயார் நிலையில் இருப்பதற்கான நேரடி வடிவம் அது.
எனவே பயிற்சியானது உண்மையான போர் போன்றே இருக்க வேண்டும். அதற்கான சிறந்த செயல்திட்டங்கள், உயர் மட்ட அமைப்புகள் தேவை. நாட்டின் பாதுகாப்பு சூழல், போர் நிலைமை, நவீன போர் முறைகள், பயிற்சி போன்றவற்றில் புதிய மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்கேற்ப அதிகாரிகள் மற்றும் வீரர்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வியறிவை உயர்த்த வேண்டும். பயிற்சியில் புதிய ஆயுதங்களை பயன்படுத்த முயற்சியுங்கள்” என்று கூறினார்.