பீஜிங்:-
கம்யூனிச நாடான சீனா ஒரு நாத்திக நாடாக அறியப்படுகிறது. ஆனால் சீனாவில் ஆன்லைன் கேம்கள் ஒரு மத வழிபாடாக போற்றப்படுகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் விளையாட்டுக்களின் சந்தையாக சீனா விளங்குகிறது இதன் மூலமாக சீனாவிற்கு ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது.
தற்போது உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை வீடியோ கேம்கள் விளையாடுவது மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் போன்றவற்றில் செலவழித்து வருகிறார்கள் பெரும்பாலானவர்கள் ஆன்லைன் கேம்களில் விருப்பம் உள்ள காரணத்தால் தற்போது ஆன்லைன் கேம் இண்டஸ்ட்ரி பெரும் அளவில் லாபம் ஈட்டி வருகிறது. இதை நன்கு புரிந்து வைத்துள்ளது சீனா.
ஆன்லைன் கேம்களின் பொருளாதார வலிமையை புரிந்து கொண்ட சீனா தற்போது வேறு ஒன்றையும் புரிந்து கொண்டுள்ளது. அதாவது இந்த ஆன்லைன் கேம்கள் மூலமாக தங்கள் நாட்டுக் குடிமக்கள் எளிதில் வெளி உலக தொடர்பு ஏற்படுத்தி கொள்வதையும், அதன் மூலமாக தங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கள் வளர்வதை தற்போது புரிந்து கொண்டுள்ளது.
இதையடுத்து சீனா தனது தணிக்கையை ஆன்லைன் கேம்களின் பக்கம் திருப்பியுள்ளது. சீனாவில் நம் நாட்டைப் போல எளிதில் எவரும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து விட முடியாது. சீனாவில் ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அவர்களுடைய சமூக வலைதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், சமூக வலைதளங்கள் கடும் தணிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவித செய்திகளோ அல்லது அவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்துகள் ஏதேனும் பகிரப்பட்டால் உடனடியாக கடும் நடவடிக்கைகள் பாயும். மக்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுக்கு இடையில் தான் உள்ளார்கள். சீனாவில் மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் முழு கண்காணிப்பின் கீழ் உள்ளார்கள்.
இதையடுத்து சீனா தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற நாட்டைச் சேர்ந்தவர்களுடன் ஆன்லைன் கேம்கள் விளையாடுவது தடைசெய்துள்ளது. அதேபோல அவர்களுடன் உரையாடுவதை தடைசெய்துள்ளது.
இதையடுத்து பல கேம்களை கடும் தணிக்கைக்கு உட்படுத்தி தடை செய்துள்ளது சீன அரசாங்கம். இதையடுத்து சீன அரசாங்கம் தனது அதிகார சாட்டையை புகழ்பெற்ற Nintendo game – animal crossing ஆன்லைன் கேம் மீது சுழற்றி உள்ளது.
இந்த ஆன்லைன் கேம்கள் பிற நாடுகளுடன் குறிப்பாக ஹாங்காங்கை சேர்ந்த ஜனநாயக சார்பு (Pro-Democracy) போராட்டக்காரர்களுடன் சீன மக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்கு வழி வழிவகுக்கிறது. குறிப்பாக ஜோஷுவா வாங் (Joshua Wong) உடன் தொடர்பு கொள்ள வழிவகை செய்வதை அடுத்து கடும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. ஜோஷுவா வேறுயாருமல்ல ஹாங்காங்கில் நடைபெற்றுவரும் ஜனநாயக சார்பு போராட்டங்களின் முக்கிய புள்ளியே இந்த ஜோஷ்வா தான்.
இதையடுத்து உஷாரான சைனா ஆன்லைன் கேம்கள் தொடர்பான பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. ஆன்லைன் கேம்கள் மொத்தத்தையும் அரசாங்கம் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதன்படி மக்கள் எவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுடன் ஆன்லைன் கேமில் விளையாடக்கூடாது, மேலும் தங்களது உண்மையான பெயர் கொண்டுதான் லாகின் செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளது.
மொத்தத்தில் சீனாவைப் பொறுத்தவரை “ஜனநாயகம்” என்றால் அலர்ஜிக்குரிய வார்த்தை.