முக கவசங்களை அணிவதால் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படாது என நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனமான WHO கூறியுள்ளது.
இதுகுறித்து கூறிய WHO தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus):-
எங்கெல்லாம் சமூக விலகியிருத்தலுக்கும், கைகளை சோப் போட்டு கழுவுவதற்கும் சிரமம் உள்ளதோ அங்கு மட்டுமே முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் என்றார்.
மருத்துவ பணியாளர்களுக்கான மாஸ்குகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால், மாஸ்க்குகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், கொரோனா தடுப்பூசி சோதனைகளை ஆப்பிரிக்கர்களிடம் நடத்த வேண்டும் என சில விஞ்ஞானிகள் கூறியுள்ளதை வன்மையாக கண்டித்த அவர் கூறியதாவது.
ஒரு சில இனவெறிப்(பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்கள் உடலில் செலுத்திப் பரிசோதிக்க ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.
முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதி்க்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்த வார்த்தைகள், இதை கடுமையாக எதிர்க்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.
ஆப்பிரிக்க மண்ணும், அதன் மக்களும் ஒருபோதும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது.
ஒரு தடுப்பூசியை பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளை கடைபிடிக்க கூறியுள்ளதோ அதை உலகச்சமூகம் கடைபிடிக்க வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.
இது ஒரு மேலாதிக்க மனோபாவம், இது நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் ஆப்பிரிக்க கண்டத்தவருக்கு உறுதி அளித்துள்ளார்