ஈரானின் முக்கிய தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இவ்வாறு ஈரான் தலைவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதால் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் நிரந்தரமாக முடிவுக்கு வருவதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அப்பாஸ் மவுசாவி தனது டிவிட்டர் பக்கத்தில், “ஈரான் சுப்ரிம் தலைவர் (அயதொல்லா அலி கமெனெய்), ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் (முகமது ஜாவத் ஷரிஃப்) மீது தேவையில்லாத பொருளாதார தடைகளை விதிப்பது தூதரக உறவுகளை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் செயலாகும். உலக அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டுவதற்கான சர்வதேச அமைப்புகளை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீர்குலைத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத் தடை தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஈரான் உட்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோத விரும்பவில்லை. ஆனால் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதாரத் தடையின் விளைவாக பல நூறு கோடி டாலர் மதிப்பிலான ஈரான் சொத்துகள் முடங்கும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார்.