மணிலா :
பிலிப்பைன்ஸ் உலகின் மிகவும் பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சக்தி வாய்ந்த புயல்கள் இந்நாட்டைத் தாக்குகின்றன. இதுதவிர நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களும் அங்கு ஏற்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் பிலிப்பைன்ஸில் இயற்கையும் தன் பங்குக்கு பாதிப்பு தருவதை தொடருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதங்களாக பிலிப்பைன்ஸை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த புயல்கள் தாக்குகின்றன. இந்த மாத தொடக்கத்தில் “கோனி” என்ற சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு பிராந்தியங்களை கடுமையாக உலுக்கியது. இது இந்த ஆண்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக அமைந்தது.
இந்த புயலால் பிலிப்பைன்ஸில் 30-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய 21-வது புயலாகும்.
“வாம்கோ” என பெயரிடப்பட்ட இந்த சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவை புரட்டிப்போட்டுள்ளது. மேலும் மணிலாவில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள புலாக்கன் மற்றும் பம்பங்கா ஆகிய மாகாணங்களிலும் இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
மணிக்கு 130 கி.மீ.- 235 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயலைத் தொடர்ந்து மழை வெள்ளம் போல கொட்டித்தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. புயல் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.மேலும் இந்த பேரிடரில் சிக்கி காணாமல் போன 12 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.