லெய்டன்:-
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் நெதர்லாந்து நாட்டில் குடிகார இளைஞர் ஒருவர் இரண்டு போலீசார் மீது வேண்டுமென்றே இருமிய (Coughing) குற்றத்திற்காக 10 வாரங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தின் லெய்டன் நகரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவர் மது அருந்தியுள்ளாரா என்று சோதித்துள்ளனர்.
போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்த அந்த குடிகார இளைஞர் போலீசாரின் மீது வேண்டுமென்றே இருமி ‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது, இப்பொழுது உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டது’ என்று போலீசாருக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர் மீது ‘மரண அச்சுறுத்தல் மற்றும் எதிர்பாராத திடீர் தாக்குதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு 10 வாரங்கள் ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே அந்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றி இல்லை என்று தெரியவந்தது.
இதனிடையே நெதர்லாந்து நாட்டில் இதுவரை 3000 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 103 பேர் வரை உயிரிழந்தனர்.