ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி இடையே சந்திப்பு.
தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் துஷன்பே சென்றுள்ளனர்.
2001 ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில், அமைப்பில் சீனா, ரஷியா, இந்தியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்நிலையில், இந்த மாநாட்டை தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான் தலைமை தாங்கி நடத்துகிறார். நேரடியாகவும், காணொலி முறையிலும் நடக்கும் இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகள் மற்றும் பார்வையாளர் நாடுகளின் தலைவர்கள், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் சிறப்பு விருந்தினர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
மேலும், இந்தியா சார்பில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக துஷன்பே சென்றுள்ள இந்திய வெளியவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங்க் யி-வை நேற்று சந்தித்து பேசினார்.
இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருநாட்டு படைகளையும் விலக்கிக்கொள்வது, அமைதியை நிலைநாட்டுவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம், பிராந்திய அமைதி குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் நேரில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மக்மூத் குரேஷி ஆகியோரும் துஷான்பே செல்வார்கள் என தெரிகிறது.