லண்டன்:
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக திட்டமிட்டுள்ளதாக எம்.பி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி மூலம் கிடைக்கும் சம்பளம் போதவில்லை என போரிஸ் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்டியதாகவும், இதன் காரணமாக அவர் பதவி விலகப் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தின் பிரதமராக பதவி வகிக்கும் போரிஸ் ஜான்சன் தற்போது ஆண்டிற்கு 1 லட்சத்து 50,402 யூரோ சம்பளம் வாங்குகிறார்.அந்த சம்பளம், அவரது முந்தைய பணியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் மிகவும் குறைவானதாக இருப்பதாக ‘தி டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
போரிஸ் ஜான்சனுக்கு 6 குழந்தைகள் உள்ளது. அவர்களில் சிலர் குழந்தைகள் என்பதால் அவர்களின் செலவை போரிஸ் கவனித்து கொள்கிறார்.அதோடு, விவாகரத்தான முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டியுள்ளதால் போரிஸ் கடும் நிதி நெருக்கடியில் உள்ளார்.எனவே அடுத்த 6 மாதத்தில் பதவி விலக தீர்மானித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டோரி கட்சியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு போரிஸ் பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார்.அப்போது, அவர் ஆண்டிற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் யூரோ சம்பளம் வாங்கியுள்ளார். மேலும், மாதத்தில் இரண்டு சொற்பொழிவாற்றி மாதத்திற்கு 1 லட்சத்து 60 ஆயிரம் யூரோ சம்பாதித்து வந்துள்ளார்.இதனால், போரிஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து தனது முந்தைய பத்திரிகை பணிக்கே திரும்பப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.