அரபு நாடுகளில் வேலைப்பார்ப்பவர்கள் இந்திய முஸ்லீம்களுக்கு எதிராக மதம் சார்ந்த தவறான கருத்துக்களை பதிவிட்டு வந்ததற்கு கண்டன பதிவுகள் வரத் துவங்கியது மற்றும் சிலருக்கு வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரபு நாட்டைச் சேர்ந்த அரசர்கள், இளவரசிகள் குறித்த ட்வீட்களே சமூக ஊடகங்களில் பிரதானமாக மாறியது.
சுல்தான் கியாபூஸ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், ஓமன் நாட்டின் துணைப் பிரதமர் சயீத் பாஹத் உடைய மகளான இளவரசி மோனா பின்த் பாஹத் அல் சயீத் உடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவை கண்டித்து பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கடந்த சில நாட்களாக பதிவு ஒன்றும் வைரலாகி வந்தது.
ஓமான் நாட்டின் இளவரசியான மோனா பின்த் பாஹத் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கத்தில்:-
இந்தியாவில் உள்ள முஸ்லீம் சகோதர மற்றும் சகோதரிகளுக்கு ஓமன் துணை நிற்கும். முஸ்லீம்களின் துன்புறுத்தலை இந்திய அரசு நிறுத்தவில்லை என்றால், ஓமனில் வாழும் 1 மில்லியன் தொழிலாளர்கள் வெளியேற்றப்படலாம். இந்த பிரச்சனையை நான் நிச்சயமாக ஓமன் சுல்தானிடம் எடுத்துச் செல்வேன் ” என பிரதமர் நரேந்திர மோடியை டக் செய்து வெளியாகி இருந்தது. இந்த ட்வீட் அதிக அளவில் வைரலாகியது.
சமூக வலைதளங்களில் உருவாகி இருக்கும் மத வெறுப்புணர்வு பிரச்சனையால் ஓமன் நாட்டில் வாழும் இந்தியர்களை வெளியேற்றப்படலாம் என அந்நாட்டின் இளவரசி கூறியதாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
அப்படி வைரலான ட்விட்டர் பக்கத்தில் Parody (போலியான) என இடம்பெற்று இருக்கிறது. ஓமன் நாட்டின் இளவரசி மோனா பின்த் பாஹத் பெயரில் யாரோ போலியான ட்வீட் செய்து வைரல் செய்து இருக்கிறார்கள்
இதற்கு மோனா பின்த் அளித்த அறிக்கையில், தன் பெயரில் அவமதிப்பான ட்வீட் பதிவுகள் வருவது குறித்தும், சமூக ஊடங்களில் தன் இருப்பு குறித்தும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். மேலும், தன்னுடைய உண்மையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தின் ஐடி-க்களையும் அளித்து இருக்கிறார். இந்த பதிவு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவிற்கு எதிராக சில போலியான ட்விட்டர் பக்கங்கள் உருவாக்கப்பட்டு ட்வீட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. ஓமன் நாட்டின் இளவரசி பெயரில் வைரல் செய்யப்பட்ட ட்வீட் இடம்பெற்ற பக்கம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டன. அந்த ட்விட்டர் பக்கத்தில் 2019-ல் வெளியான வீடியோ பதிவில் காஷ்மீர் விவாகரத்தில் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டையும், பாகிஸ்தான் பிரதமரின் ஆதரவு டேக் இடம்பெற்றதையும் பார்க்க முடிந்தது.
இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த ட்விட்டர் அக்கவுண்ட் ஒன்று @pak_fauj என்பதன் பெயரை ஓமன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மோனா பின்த் பாஹத் அல் சயீத் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் போல் @SayyidaMona என்ற பெயரில் மாற்றி இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.