பாக்தாத்:
ஈராக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அல்கதீப் நகரில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கருகி உயிரிழந்தனர்.இந்நிலையில் ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் கோர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் தென் பகுதியில் நசீரியா என்ற நகரம் உள்ளது. இங்கு அல் உசேன் ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது.
ஈராக்கிலும் கொரோனா பரவல் அதிகமாகி வந்ததையடுத்து இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக கொரோனா வார்டு ஒன்றை உருவாக்கினார்கள். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வார்டு திறக்கப்பட்டது.நேற்று நள்ளிரவு 63 பேர் அந்த வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே வார்டு முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது. இதில் நோயாளிகளும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் தப்பித்து செல்ல முடியாதபடி நாலாபுறமும் தீ சூழ்ந்துகொண்டது. அதற்குள் சிக்கி 52 பேர் உயிரிழந்தனர்.பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
அந்த இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற வார்டுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை. சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.மற்றொரு அதிகாரி கூறும்போது, மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். இன்னும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.
ஈராக்கில் ஏற்கனவே ஆஸ்பத்திரிகள் முழுமையாக செயல்படவில்லை. பெயர் அளவுக்குதான் அவை செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆஸ்பத்திரியில் பராமரிப்பு பணி மிகவும் மோசமாக உள்ளது. எனவேதான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.