பிரான்ஸ் நாட்டில் இந்திய அரசுக்கு சொந்தமான 180 கோடி மதிப்புடைய 20 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளான.
இந்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டதன் காரணம் என்ன, இதன் பின்னணி குறித்து காணலாம்.
இந்திய அரசாங்கத்திற்கும் பிரிட்டனை சேர்ந்த எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கும் இடையிலான நீண்ட கால உரசலில் வெளிப்பாடாக பிரான்சில் உள்ள இந்திய அரசுக்கு சொந்தமான 1.2 மில்லியன் மதிப்புடைய 20 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
20 ஆண்டுகளுக்கு முன் பிரட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy) நிறுவனம் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் முதலீடு செய்தது.
பின்னர் கடந்த 2006இல் இந்தியாவில் இந்த முதலீடுகளை, கெய்ர்ன் இந்தியா என்ற துணை நிறுவனத்திற்கு மாற்றியது.
இந்த பரிவர்த்தனையில் கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy) மூலதன வருவாய் ஈட்டியதாக கூறிய மத்திய அரசு, இதன் மீது 9,000 கோடி ரூபாய் வரி விதித்தது. ஆனால் இந்த வரி விதிப்பை எதிர்த்து கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy),வருமான வரி மேல்முறையீட்டு தீர்பாயத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கெய்ர்ன் இந்தியாவின் பங்குகளில் 10 சதவீதத்தை மத்திய அரசு கையகப்படுத்தி, 9,000 கோடி வரித் தொகையை 2012இல் வசூலித்தது.
இதை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy) மேல்முறையீடு செய்தது.
2020 டிசம்பரில், இந்திய அரசு 9000 கோடி ரூபாயை வட்டி, அபராதத் தொகைகளுடன் கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy) நிறுவனத்திற்கு திரும்பி செலுத்த வேண்டும் என்று சர்வதேச தீர்பாயம் தீர்பளித்தது.
இந்திய அரசு மொத்தம் 12,700 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்திய அரசின் சொத்துகளை நீதிமன்ற ஆணை மூலம் கையகப்படுத்த கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy) முயற்சி செய்து வருகிறது.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் சர்வதேச தீர்பாயம் அளித்த தீர்ப்பின் படி பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தை நாடியது கெய்ர்ன் எனெர்ஜி நிறுவனம்.
இந்நிலையில், செவ்வாய் அன்று பிரான்ஸ் நாட்டில் இந்திய அரசுக்கு சொந்தமான 20 சொத்துகளை, நீதிமன்ற ஆணை மூலம் கெய்ர்ன் எனெர்ஜி (Cairn Energy)முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.