கொரானா தொற்று நெருக்கடியால் கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு தெரிவிக்கிறது .
பள்ளிகள் மூடப்பட்டதால் 91 சதவிகித (160 கோடி) குழந்தைகளின் கல்வி பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் கொரானா தொற்று நீட்டிக்கப்படுவதைக் கண்டு டிஜிட்டல்கல்வியை நோக்கி நகர்ந்துள்ளன.
இருப்பினும், சுமார் 70 கோடி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். 143 நாடுகளில், 37 கோடி குழந்தைகள் உணவுக்காக பள்ளிகளை நம்பியுள்ளனர். பள்ளியைத் திறக்காதது குழந்தைகளின் பசியையும் ஊட்டச்சத்துக் குறைவையும் அதிகரித்தது. இது வரும் ஆண்டுகளில் அதிக உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஆய்வு தெரிவிக்கிறது .
பல வளரும் நாடுகள் தொடக்கக் கல்வியில் கூட பாலினசமத்துவத்தை அடைய முடியவில்லை. சுமார் 40 லட்சம் அகதி குழந்தைகள் தொடக்கக் கல்விக்கு வெளியில் உள்ளனர். கோவிட் முடிவடைந்தாலும், 2030 க்குள் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை 20 கோடியை எட்டும் என்று ஐநா மதிப்பிடுகிறது.
ஆன்லைன் கல்வி உலகில் டிஜிட்டல் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் தகவலின்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (370 மில்லியன்) பேருக்கு இணைய வசதி இல்லை என தெரிவிக்கின்றனர்.
இது வளர்ச்சியடையாத நாடுகளில் மிகவும் மோசமாக உள்ளது. கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் மற்றும் பாலின வேறுபாடுகளும் அதிகம் உள்ளன. சஹாரா நாடுகளில் 93.3 சதவிகித வீடுகளில் கணினி இல்லை.
உலகளாவிய கல்வியால் கிடைத்த பயன்கள் ஆன்லைன் கல்வியால் சிதறுண்டு போயின. இது கொரானா தொற்று தொலைநோக்கு விளைவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஐநா மதிப்பிடுகிறது. ‘டிஜிட்டல் சமத்துவமின்மையிலிருந்து எழுத்தறிவின் மனித நேயத்தை மீட்டெடுத்தல்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக எழுத்தறிவு தின செய்தியாகும்.