பாஸ்டன்:
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசை கண்டறிய பல்வேறு பரிசோதனைகளை உலக நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கான பிரத்யேக கருவிகளும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முககவசம் மூலமே கொரோனாவை கண்டறியும் வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து வடிவமைத்துள்ளன.
அந்தவகையில் கொரோனா வைரசை கண்டறியும் பிரத்யேக சென்சார் பொருத்தப்பட்ட முககவசங்களை இந்த நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் வடிவமைத்து உள்ளனர். இந்த முககவசம் அணிபவரின் மூச்சுக்காற்றை பரிசோதித்தே இந்த சென்சார்கள் தொற்றை உறுதி செய்து விடுகின்றன. அணிந்தவருக்கு தொற்று இருக்கிறதா…??? இல்லையா..??? என்ற முடிவை 90 நிமிடங்களில் இது வெளிப்படுத்துகிறது.
சிறிய மற்றும் எளிதில் அகற்றக்கூடிய இந்த சென்சார்களை மற்ற முகமூடிகளிலும் பொருத்த முடியும். இதைப்போல பிற வைரஸ்களை கண்டறியும் வகையிலும் இவற்றை மாற்றியமைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.