டெல்லி:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.
அதில் பல்ராம் பார்கவா கூறியதாவது,”தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. ஜூலை மாத பாதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தினமும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் அளவிற்கு போதுமான அளவு டோஸ்கள் கிடைக்கும். டிசம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த பேருக்கும் தடுப்பூசி போட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது,”இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைவோர் சதவீதம் 92 சதவீதமாக உள்ளது. ஒருவாரமாக தினமும் சராசரியாக 20 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தினமும் 1.3 லட்சம் என்ற எண்ணிக்கையில் குறைந்து வருகிறது.
நாடு முழுவதும் 1.67 கோடி சுகாதார பணியாளர்கள், 2.42 கோடி முன்கள பணியாளர்கள், 15.48 கோடி , 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மொத்தம் 21.60 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.” என்றார்.