அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் சுப்பிரமணியனை பரிந்துரைத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்.
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை ஜனாதிபதி ஜோபைடன் பரிந்துரைத்துள்ளது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது. இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி என்ற சிறப்பை பெறுவார் அருண் சுப்பிரமணியன். மேலும் இவர் 2006 முதல் 2007-ஆம் ஆண்டு வரை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார். இந்நிலையில் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசிபிக் அமெரிக்க பார் அசோசியேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது