ஷார்ஜா:-
கேரளாவில் நடந்த மகனின் இறுதி சடங்கை ஃபேஸ்புக் வழியாக பார்த்து துபாயில் இருக்கும் பெற்றோர் கதறி அழுத சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் மலச்சேரி அருகே சம்மக்கவிளையல் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் துபாயில் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று மகன்கள்.
மூத்த மகன் ஜூயல் ஜோமே (Jeuel G.Jomay (16)) ஷார்ஜாவில் உள்ள ஜெம்ஸ் மில்லினியம் (Gems Millennium) பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜூயலுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஜூயல் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து ஷார்ஜாவில் உள்ள அமெரிக்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று நோயால் மரணமடைந்தார். கடந்த 2004ஆம் வருடம் ஏப்ரல் 14 புனித வெள்ளியன்று கோவில் பிறந்தார் தற்பொழுது 2020 ஆம் வருடம் ஈஸ்டர் பண்டிகையின் போது ஜோயல் மறைந்துள்ளார்.
இதையடுத்து கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊரில் மகனின் இறுதிச் சடங்கை செய்ய பெற்றோர் திட்டமிட்டனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை என்று ஐக்கிய அமீரக அதிகாரிகள் கூறினார்கள். பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு ஜூயல் உடல் சரக்கு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் குடும்பத்தினர் யாரும் இந்தியா செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக ஜூயல் உடலை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னர் ஷார்ஜாவில் உள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் ஜூயல்-ன் உடலுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதை கேரளாவில் உள்ள அவரின் உறவினர்கள் ஃபேஸ்புக் வழியாக பார்த்தனர். முஹைஷ்னா-ல் (Muhaisnah) உள்ள எம்பாமிங் மையத்தில் ஜூயல்-ன் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது.
அதன் பின்னர் கேரள மாநிலம் கொச்சிக்கு ஜூயல் உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதிகாரிகளின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டா கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள தேவாலயம் ஒன்றில் அவரது உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். ஃபேஸ்புக் மூலமாக இதை கண்ட ஜூயல்-ன் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.