காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லை வழியாக சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதனைக் கவனித்த இந்திய வீரர்கள், சீன வீரர்களை தடுத்து நிறுத்தி அவர்களின் பகுதிக்கு திரும்பிச் செல்லும்படி கூறினர்.
ஆனால் சீன வீரர்கள் ஊடுருவல் முயற்சியை கைவிடாமல் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் சீன தரப்பில் 20 வீரர்களும், இந்திய தரப்பில் 4 வீரர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் நிலையிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் சீன வீரர்களின் ஊடுருவல் முயற்சியின் மூலம் சிக்கிம் எல்லையில் புதிய பிரச்சனை உருவாகி உள்ளது.