சென்னை :
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருப்பெற்றுள்ளது. இதற்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. “நிவர்” என்ற பெயரை ஈரான் வழங்கியது.
ஈரானிய மொழியில் நிவர் என்றால் “வெளிச்சம்”. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்காக உருவாக்கப்பட்ட புது பெயர் பட்டியலில் மூன்றாவது பெயராக இது உள்ளது.
இந்த வருடம் மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை பெரிதும் சேதமாக்கிய அம்பான்(உம்பான்) புயலுக்கு தாய்லாந்து பெயர் வைத்தது. அதேபோல கடந்த ஜூன் மாதம் மஹாராஷ்ட்ராவில் கரையை கடந்த ‘நிஷாக்ரா’ புயலின் பெயரை வங்கதேசம் பரிந்துரை செய்தது. இதேபோல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரபிய கடலில் உருவாகி சோமாலியாவில் கரையை கடந்த ‘கதி’ புயலுக்கு இந்தியா பரிந்துரை செய்த பெயர் வைக்கப்பட்டது.
வட இந்திய பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஒமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள்தான் இணைந்து புது புது பெயர்களை பரிந்துரை செய்கின்றன. இந்நாடுகளால் 172 பெயர்கள் புயல்களுக்கு சூட்டபட்டுள்ளன. இந்த அமைப்பில் இருக்கும் நாடுகளின் பெயர்கள் ஆல்ஃபபெட்டிகல் ஆர்டர்(alphabetical order) அடிப்படையில் இருக்கும்.