பீஜிங்:
சீனாவின் மிகப் பெரும் கோடீஸ்வரரும், ‘ஆன்லைன்’ விற்பனை தளமான, அலி பாபாவின் நிறுவனருமான ஜாக் மா, கடந்த மூன்று மாதங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. சமூக வலை தளங்களிலும் அவர் செய்தி ஏதும் வெளியிடவில்லை.
முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் சீன அரசின் வங்கி மற்றும் நிதி கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஜாக் மா விமர்சித்திருந்தார். அதனால் சீன அரசின் கோபத்துக்கு ஆளானார். இந்நிலையில், அவருடைய, ‘ஆன்ட்’ நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு சீன அரசு அனுமதி தரவில்லை.
இந்த நடவடிக்கைகளால், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அவருக்கு இழப்பு ஏற்பட்டது. வெளிநாடு செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.அதையடுத்து கடந்தாண்டு, அக்டோபருக்குப் பின், ஜாக் மா எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. சமூக வலை தளங்களிலும் அவர் செய்தி ஏதும் வெளியிடவில்லை. அதையடுத்து, அவருடைய நிலை குறித்த சந்தேகம், சர்ச்சை, ஊகங்கள் பல வெளியாயின.இந்த நிலையில், 100 ஆசிரியர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், ஜாக் மா ஆலோசனை நடத்தும், ‘வீடியோ’ வெளியாகி உள்ளது. அதில் அவர், ‘கொரோனா வைரஸ் பரவல் நின்ற பிறகு சந்திக்கலாம்’ என, கூறியுள்ளார்.ஜாக் மா, மூன்று மாதங்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காததால் எழுந்த சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.