கடந்த பிப்ரவரி முதல் வாரம் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. இதையடுத்து மியான்மரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாட்சி, அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது இராணுவம் கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தையும் மியான்மர் அரசு அறிவித்தது.
இந்தநிலையில், போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது, நேற்று (28.02.2021) மியான்மர் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், மியான்மர் இராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் உயிரழந்ததாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணையம், “போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை எதிர்கொண்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு கிடைத்த நம்பகமான தகவல்களின்படி – குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
இந்த மனித உரிமை மீறல் செயலை, பல உலக தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர், “தேர்தல் மூலம் வெளிப்பட்ட மியான்மர் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும், அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் ஒன்று கூடி இராணுவத்திற்கு ஒரு தெளிவான சமிக்ஞையை அனுப்புமாறு பொதுச்செயலாளர் கேட்டுக்கொள்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.