நகங்களை அழகுபடுத்தும் கலையான Nail Art கலையில் நிபுணரான சன்னி என்பவர் போலி நகத்துக்குள் மீனை நீந்த செய்து அசத்தியுள்ளார்.
மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க, ஃபேஷன் துறையில் உள்ளவர்கள் உலகின் கவனத்தை ஈர்க்க தனித்துவமான விஷயங்களை செய்வார்கள்.
இந்நிலையில் ரஷ்யாவை சேர்ந்த நக அழகு கலைஞர் அழகு கலையில் தனித்துவமான ஒன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சியில், போலி நகங்களை உருவாக்கி அவற்றில் நேரடி மீன்களைப் பயன்படுத்தி நீந்த செய்துள்ளது இணையத்தில் வைராகி வருகிறது.
70களில் மிகவும் பிரபலமாக இருந்த மீன் தொட்டி காலணிகளால் தன்னை வெகுவாக ஈர்க்கப்பட்டதாகவும், அதனை அடிப்படையாக வைத்தே இந்த நகங்களை உருவாக்கியதாகவும் சன்னி கூறியுள்ளார். மேலும், இதனை அக்வேரியம் மேனிகியூர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அழகுக்கலை என்ற பெயரில் நேரடியாக மீனைப் பயன்படுத்து விலங்கு துஷ்பிரயோகம் என்று நெட்டிசன்கள் ஒருபுறம் விமர்சித்து வருகின்றனர்.
அழகு கலை என்ற பெயரில் இவ்வாறு உயிரினங்களை பயன்படுத்துவது முட்டாள்தனமான செயல், இது மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று பீட்டா இங்கிலாந்து இயக்குனர் எலிசா ஆலன் கூறியுள்ளார்.
சன்னி அழகுக்கலை என்ற பெயரில் விலங்குகள் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 இல், உண்மையான இறால் தலைகளை நகங்களுக்குள் அவர் வைத்ததை பார்த்து அனைவரும் திகைத்துப்போனார்கள்.
மேலும், உயிருள்ள எறும்புகளையும் நகங்களுக்குள் ஓடச்செய்துள்ளார் சன்னி என்பது குறிப்பிடத்தக்கது.