கராச்சி:
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தது.
இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நேற்று கராச்சி நகரில் பிரம்மாண்ட பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொண்டு உரையாற்றினார். இம்ரான் கானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிலாவல் பூட்டோ சர்தாரி முன்வைத்தார்.
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் பேசும்போது, “பாகிஸ்தானில் மீண்டும் நவாஸ் ஷெரீபை பிரதமர் ஆக்குவதாகவும், இம்ரான் கானை ஜெயிலுக்கு அனுப்புவதாகவும்” பேசினார்.
இந்த நிலையில், மரியம் நவாசின் கணவர் சப்தார் அவானை போலீசார் கைது செய்துள்ளனர். மரியம் மற்றும் அவரது கணவர் இருவரும் கராச்சியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தபோது அங்கு சென்ற போலீசார் சப்தாரை கைது செய்துள்ளனர்.அறைக் கதவை உடைத்து போலீசார் தன் கணவரை கைது செய்ததாக மரியம் நவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.