காபூல்:-
காபூல் விமான நிலையம் அருகே சொந்த நாட்டிற்கு திரும்ப காத்திருந்த 150 பேரை தலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் வெளியிடப்படவில்லை.
ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பயந்து, அங்கிருந்து ஏராளமான வெளிநாட்டினர், தாயகம் திரும்பி வருகின்றனர். அவர்களை சம்பந்தப்பட்ட நாடுகள் விமானங்களை அனுப்பி அழைத்து வருகின்றனர். பலர் விமான நிலையம் அருகே காத்திருக்கின்றனர். பாதுகாப்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில், 8 மினி வேன்களில் வந்தவர்கள் காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை கடத்திச் சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் எனவும், அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
ஆனால், இது குறித்து உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தலை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர முயற்சி செய்து வருகிறது.
ஆனால், தலிபான்களின் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாஸிக், 150 பேரை கடத்தப்பட்ட தகவலை மறுத்துள்ளார். காபூலில் உள்ள ‛தி நியூயார்க் டைம்ஸ்’ நிருபருக்கு அளித்த பேட்டியில் இதனை அகமதுல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று காலை, இந்திய விமானப் படையின் விமானம் மூலம், ஆப்கானிலிருந்து 85 இந்தியர்களுடன் புறப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.