வடகொரியாவில் மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்ற வினோதமான தடை உத்தரவை அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல் உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன்னுடைய நாட்டு மக்களுக்கு வித்தியாசமான உத்தரவுகளை பிறப்பிப்பதில் பெயர் போனவர்.
தற்போது புதிதாக அந்நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்ற வினோதமான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வட கொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த 11 நாட்களும் அந்நாட்டு மக்கள் துக்க நாட்களாக அனுசரித்து, மது அருந்துவது, பிறந்தநாள் கொண்டாடுவது, சத்தமாக அழுவது உள்ளிட்ட எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துக்க அனுசரிப்பு தினமான டிச.17ம் தேதியன்று, வடகொரிய மக்கள் யாரும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த உத்தரவுகள் அனைத்தும் 11 நாட்களுக்கு கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும், அதனை மீறுபவர்கள் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது கூடுதல் கொடுமையாக பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் அனைத்தும் வடகொரிய மக்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருவது தான் என்றாலும், இந்தாண்டு முன்னாள் அதிபர் கிம் ஜான் இல்-லின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் என்பதால், கூடுதலாக ஒரு நாள் சேர்த்து 11 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.