தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அதிபரானார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் பிரதமராக பதவி ஏற்றதும், முஷரப் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தார்.
2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷரப் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். முஷரப் மீதான தேசத் துரோக வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 6 ஆண்டுகளாக விசாரித்து வந்தது. கடந்த 17-ந் தேதி முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மரண தண்டனைக்கு எதிராக லாகூர் ஐகோர்ட்டில் முஷரப்பின் வழக்கறிஞர் அஸார் சித்திக்கி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில் தேசநலனுக்கு எதிரான எந்த காரியத்திலும் முஷரப் ஈடுபட்டதற்கான ஆதாரங்களோ, தேசத்துரோகம் செய்தார் என்பதற்கான ஆதாரங்களோ கோர்ட்டில் நிரூபிக்கப்படாத நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.