தாய்லாந்து:
மன்னர்களை கடவுளாக வணங்கிய தாய்லாந்தில் இன்று மக்கள் மன்னருக்கெதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தாய்லாந்தின் தற்போதைய மன்னரான மஹா வஜிரலோங்கார்னுக்கு (68) பயந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து ட்விட்டரில் போராட்டம் நடத்துபவர்களும் உண்டு.அதற்கும் காரணம் உள்ளது.அந்நாட்டில் யாரேனும் மன்னரை விமர்சித்தால் அவர்களை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்றொரு சட்டமே இருக்கிறது.
மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் உள்ள பெரும் வேறுபாட்டை தாய்லாந்தை வைத்தே தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.பழங்காலத்தில் மன்னர்கள் எப்படி மக்களை ஆண்டார்களோ, அதேபோல் இன்றும் ஆட்சி செய்கிறார் வஜிரலோங்கார்ன்.பொறுப்பை மந்திரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தை மட்டும் வசூலித்து சாப்பிட்டுவிட்டு, எப்போதும் அந்தப்புரத்தில் அழகிகளுடன் செலவிடும் ஒரு பழங்கால மன்னர் போல அவர் இருப்பது, இன்றைய காலகட்ட மக்களுக்கு ஒத்துவரவில்லை.
அழகான பெண்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களை திருமணம் செய்துகொள்வார் வஜிரலோங்கார்ன், அது தனது அமைச்சரானாலும் சரி, பாதுகாவலரானாலும் சரி, தனக்கு சிகிச்சையளித்த செவிலியரானாலும் சரி. ஒரு படி மேலே போய் சட்டரீதியாக வைப்பாட்டியும் வைத்துக்கொள்வார்.அரசவையில் மக்கள் எல்லாம் அவரது காலுக்கு கீழேதான் விழுந்து கிடக்கவேண்டும்.ஜெர்மனிக்கு சென்று ஒரு ஹோட்டலை புக் செய்து அழகிகளுடன் உல்லாசமாக இருப்பார்.
இப்படிபட்ட ஒரு மன்னரை எவ்வளவு நாள் தான் மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்??? பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து, இப்போது தெருக்களில் இறங்கி தைரியமாக மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்.புதிய அரசியல் சாசனம் வேண்டும்….மன்னரது உரிமைகள் கட்டுப்படுத்தப்படவேண்டும்…. என அவர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.