நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவரானது செவ்வாய் கிரகத்தின் பாறையை துளையிட்டு மாதிரியை வெற்றிகரமாக சேகரித்துள்ளது.
பெர்சவரன்ஸ் ரோவரானது 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி செவ்வாய் நோக்கி நாசாவால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலமானது 2021 பிப்ரவரி 18ம் தேதி செவ்வாயின் ஜெசேரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா என்பதற்கான ஆய்வை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ஆளில்லாத உளவு வாகனம் ஆகும்.
பெர்சவரன்ஸ் ரோவரானது ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் பாறை மாதிரியை சேகரிக்க முதல் முயற்சியை மேற்கொண்டது. ஆனால் பாறையை துளையிட்டு சேகரிக்கும்போது, பாறை மாதிரி முழுவதுமாக நொறுங்கி சேமிப்பு குழாயிலிருந்து வெளியே விழுந்தது. இதனால் தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்தது.
இரண்டாவது முயற்சியாக ரோவர் வேறு இடத்திற்கு சென்று, அங்கே கடினமான பாறையைத் தேர்ந்தெடுத்து சேகரிப்பு செயல்முறையை தொடர்ந்தது. பின்னர் வெற்றிகரமாக துளையிட்டு, பாறையின் மாதிரியை சேகரித்து உள்ளது. இந்த மாதிரியானது காற்றுப்புகாத அல்ட்ரா கிளீன் குளாயினுள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து 2030 ஆம் ஆண்டின் இறுதியில், ரோவர் எடுத்த மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ள உள்ளதாக நாசா தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. -சா.கற்பகவிக்னேஷ்வரன்