தனது 15வயதில் படிக்கும் போதே பேக்கரி ஒன்றில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். 27வயதில் அரசியலில் கால் பதித்தார். 34 வயதில் நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த பின்லாந்தில் கடந்த ஏப்ரலில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் அதிக இடங்களை வென்ற சமூக ஜனநாயக கட்சி ஐந்து கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் பின்லாந்து பிரதமர் ஆண்டி ரின்னி சமீபத்தில் பதவி விலகினார். இதையடுத்து சமூக ஜனநாயக கட்சி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சன்னா மரின் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்லாந்து பார்லியில் நடந்த ஓட்டெடுப்பில் சன்னாவுக்கு ஆதரவாக 99 ஓட்டுக்களும் எதிராக 70 ஓட்டுக்களும் பதிவாகின.
இதையடுத்து பின்லாந்து அதிபர் சாலி நினிஸ்டோ சன்னா மரினிடம் முறைப்படி பிரதமர் பொறுப்பை ஒப்படைத்தார். பின்லாந்தின் 3வது பெண் பிரதமராக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பதவியேற்று உள்ளார். இதன் மூலம் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை சன்னா மரின் பெற்றுள்ளார். அவருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1906ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாகும். மேலும் 1907ல் நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு பெண்களுக்கு வாக்குரிமை அளித்த உலகின் முதலாவது நாடு பின்லாந்து ஆகும்.
தற்போது, சன்னா மரின் எம்மா அமலியா என்னும் அழகான ஒன்றரை வயது மகளுக்கு அம்மாவும் ஆவார். ஆனால் இவரது குடும்பம் பற்றி பல ஆண்டுகள் வெளியில் பகிர்ந்து கொள்ளாத சன்னா தற்போது மனம் திறந்து பகிர்ந்து வருகிறார். தன் குடும்பம் ஒரு LGBT ( lesbian, gay, bisexual, and transgender) குடும்பம் என்றும் என் அம்மாவின் வாழ்க்கை துணையாக இருந்தவர் ஒரு பெண் என்றும் இருவரும்தான் தன்னை வளர்த்து ஆளாக்கினர் என்றும் பெருமிதம் கொண்டுள்ளார்.
உலகத்தின் இயல்புகளுக்குச் சற்று மாறானது என்பதால், சிறு வயது முதல் என் குடும்பத்தைப் பற்றி நான் யாரிடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஒரே பாலினப் பெற்றோர் தங்களுக்காகக் கோரும் உரிமைகள், அவர்களின் குழந்தைகளின்மேல் எந்தவித எதிர்மறைத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் சொல்லி வருகின்றன. என்றாலும், ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழும் குடும்பங்கள் இன்றைக்கும் மறைக்கப்பட்ட அல்லது விலக்கப்பட்டவையாகவே சமூகத்தில் வாழ்ந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளுக்காக நான் வருத்தப்பட்டிருக்கிறேனே தவிர, என் குடும்பம் குறித்து எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை, என்கிறார் இளம் பிரதமர் சன்னா மரின்.