சனா:-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், கொரோனா பரவல் காரணமாக சில நன்மைகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.
உலக அளவில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது, மாசு குறைந்துள்ளது. அவ்வகையில் தற்பொழுது கொரோனா வைரஸ் ஒரு போரையே நிறுத்தியுள்ளது. ஆம், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இரண்டு வாரங்களுக்கு ஏமனில் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது சவுதி அரேபியா.
உள்நாட்டுப் போர் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஏமன் திகழ்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டால் மிகப்பெரிய விபரீதங்கள் ஏற்படும் என்று முன்னரே உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்திருந்தது.
தற்பொழுது ஏமனின் தெற்கு மாகாணமான ஹட்ராமௌட் (Hadramout) மாகாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சவுதி அரேபிய கூட்டுப் படைகள் இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கு ஐநா சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெறுவதால் ஏமனின் மொத்த கட்டமைப்பும் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவித்து வருகிறார்கள்.
எனினும் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு சதியாக இருக்கலாம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மரீஃப் நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஏமனில் அரசுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் அரசுக்கு சவுதி படைகள் ஆதரவாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.