அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகள்தான் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை இதுவரை இயக்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் பொறுப்பேற்றதும் அனைத்து நாடுகளும் நிதி உதவிகள் செய்வதை நிறுத்திக் கொண்டன.
தாலிபன்கள் பொறுப்பேற்றதும் அனைத்து செலவுகள் குறிப்பாக அரசு ஊழியர்களின் சம்பளம், அரசின் நிதியுதவியுடன் கூடியவளர்ச்சிப் பணிகள் என எதற்கும் பணமில்லை என்ற சூழலே நிலவுகிறது.
கடும் வறட்சி, மோதல்கள், கொரானா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ஆப்கான் மக்கள் தங்கள் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் மக்களின் உணவு மிக கடுமையாக பாதித்துள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நவம்பர் மாதத்திற்குள் 22.8 மில்லியன் மக்கள் நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டம் (ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம்) அமைப்புகள் கூட்டாக தெரிவிக்கிறது.
இப்படிப்பட்ட கடும் நெருக்கடியின் காரணமாக மிகவும் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை விற்று தங்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏராளமான குடும்பங்களில் உணவின்றி தவிக்கும் நிலை உள்ளதாகவும் பெரும்பாலான நாட்களில் வேலை கிடைக்காமல் வறுமையைச் சந்தித்து வருகின்ற நிலையே உள்ளது.
சில நாட்கள் வேலை கிடைத்தாலும் கிடைக்கும் பணத்தில் ஆறு அல்லது ஏழு ரொட்டித் துண்டுகளை வாங்க முடிவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குழந்தைகளை விற்கும் நிலைக்கு ஆப்கான் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் குழந்தைகளை விற்று கிடைக்கும் பணம் சில மாதங்கள் உயிர் வாழமட்டுமே உதவும் என்பதோடு மற்ற குழந்தைகளுக்கு பசியை போக்க இந்த பணம் உதவுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தங்கள் குழந்தைகளை விற்று தங்கள் பசியை போக்கிக் கொள்ளும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.