கலிபோர்னியா:-
கொரோனா வைரஸ் 6 அடி தூரம் வரைதான் பரவும் என்ற கூற்றை பொய்யாக்கும் விதமாக கொரோனா தொற்று 20 அடி தூரம் வரை பரவும் என்று அமெரிக்காவில் சான்டா பார்பராவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து தும்மல், இருமல் போது வெளிப்படும் நீர்த்துளிகள் மற்றும் மூச்சுக்காற்று மூலமாக கூட தொற்று பரவக் கூடும் என்பதால் 6 அடி தூரம் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் தற்போதைய புதிய ஆய்வு மூலம் தொற்றானது 20 அடி தூரம் வரை பரவும் என்று தெரிய வந்துள்ளது.
இருமல், சளி, எச்சில் துப்புதல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்குப் பரவுகிறது. பேசுவதன் மூலமாகவும் தெறிக்கும் துளிகளில் கொரோனா பரவுகிறது. இதன் மூலம் தொற்று உடைய 40,000 துளிகள் வெளியேறுகின்றன. புவி ஈர்ப்பு சக்தியால் பெரும்பாலும் இவை நிலத்தில் உதிர்ந்து விடுகின்றன. எனினும் சில துளிகள் காற்றில் மிதந்தபடி பல மணி நேரம் நீடிக்கின்றன.இவற்றால் ஆறடி வரைதான் பாதிப்பு என கடந்த கால ஆய்வுகள் தெரிவித்த நிலையில் 20 அடி தூரம் வரை நோய் நுண்தொற்று பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
அதேவேளையில் இந்த தொற்று பரவல் சுற்றி நிலவும் வெப்பநிலை காற்றின் ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகம் இவற்றைப் பொறுத்து மாறக்கூடும்.
இதனால் இந்தியாவில் குளிர்காலத்தில் மும்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.