கொழும்பு :
இலங்கையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. புதிதாக பாதிக்கப்படுபவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இன்னும் சில நாட்களில் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது இடங்களுக்கு செல்லும் போது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை வருகிற செப்டம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியதாவது,செப்டம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் பொது இடங்களும் செல்லும் போது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பது கட்டாயமாகிறது. தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்தியதற்கான சான்றிதழ் குறித்து சோதனை தொடங்கப்படும்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நேற்று நள்ளிரவு முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது. அந்த போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.