வாஷிங்டன்:
தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போனால் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”படத்தில் வரும் வசனம் போல தமது பிரசாரத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர்-3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்குவதையொட்டி, இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஜோ பிடனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் “நான் ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்தீர்களா??? வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு வேட்பாளருடன் தோற்று விட்டால் அதற்கு பிறகு தனது வாழ்க்கை வீண் என கருதி நாட்டைவிட்டு வெளியேறி விடுவேன். எனக்கு தெரியாது. நான் இந்த உலகத்திலேயே சிறப்பான பணம் வசூலிப்பாளன். நான் நினைத்து இருந்தால் இன்னும் அதிகமான பணத்தை தேர்தல் செலவீனத்துக்கு பெற்றிருக்க முடியும். ஆனால் எனக்கு அது வேண்டாம். அமெரிக்க அதிபர் வரலாற்றில் அதிபர் தோரணையில் சிறப்பாக நடந்து கொண்டதே நானாகத்தான் இருப்பேன். ஆனால் ஆப்ரஹாம் லிங்கன் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர் தொப்பி அணியும் ஸ்டைலை முறியடிப்பது ரொம்ப கஷ்டம்” என்று அவர் கூறினார்.
தேர்தல் செலவுக்காக டொனால்ட் டிரம்ப் தரப்பு 247 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டியுள்ளது. அதே நேரம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், தரப்பில் 383 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதி திரட்டி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.