வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் அருண் மஜூம்தார் ஆகிய இருவரும் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பிடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோ பிடனால் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை மந்திரியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் 2009-ல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்ட மஜூம்தார், எரிசக்தி துறை மந்திரியாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் பிடனுக்கு தேர்தல் நேரத்தில் முக்கியமான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.