லண்டன்:-
மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நாயகனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை கவுரவிக்கும் வகையிலும், கருப்பர், ஆசியர் மற்றும் பிற சிறுபான்மை இன மக்களுக்காக (Black, Asian and minority ethnic (BAME)) அவர் மேற்கொண்ட போராட்டங்களைக் கௌரவிக்கும் வகையிலும் இங்கிலாந்து அரசு அவருக்கு நாணயம் வெளியிட முடிவு செய்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்தின் நிதி மந்திரி ரிஷி சுனக் கூறியதாவது:-
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது.
மேலும் காந்தி கருப்பர், ஆசிய மற்றும் பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடுபட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார்.
மேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (Royal Mint Advisory Committee (RMAC)) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உலகில் பல நாட்டினர் காந்தியின் போதனைகளை கற்று வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக காந்தி திகழ்கிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி.