ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்கப் படையினர் 12 பேரும் பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து குவிந்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. ஒன்று விமான நிலையத்தின் அபே வாயில் அருகிலும், மற்றொன்று அந்த வாயில் பக்கத்தில் அமைந்துள்ள பாரன் ஓட்டல் அருகேயும் நடந்தன.
இந்த தாக்குதலில் தற்போது வரை 103 பேர் உய்ரி இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் 90 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் ஆவார்கள். அமெரிக்க மாலுமிகள் 11 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே மோசமான இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.