டெலாவேர்:-
அமெரிக்காவின் டெலாவேர் நகரில் மிக உயரமான ஹனுமார் சிலை நிறுவப்பட்டு உள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த ஹனுமான் சிலை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிற்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியைச் சேர்ந்த 12 சிற்பிகள் இந்த சிலையை உருவாக்கினார்கள். இந்த சிலை வலிமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டது. இந்த சிலை செய்வதற்கும் தெலுங்கானாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கும் சேர்த்து மொத்தம் 1,00,000 (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 75 லட்சம்) அமெரிக்க டாலர் வரை செலவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் அமைய உள்ள இரண்டாவது உயரமான கடவுள் சிலை என்ற பெருமையை இந்த அனுமன் சிலை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூ காஸ்ட்ல் கவுண்டி (New Castle County) பகுதியில் புனித ஆவி தேவாலயத்தில் உள்ள அமைதிக்கான எங்கள் பெண் அரசி சிலை (Our Lady Queen of Peace statue at Holy Spirit Church) அமெரிக்காவின் உயரமான கடவுள் சிலை ஆகும். தற்போது இந்த ஹனுமான் சிலையும் நியூ காஸ்ட்ல் கவுண்டியில் ஹோக்கிஸின் (Hockessin) பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெலாவேர் நகரில் உள்ள ஹிந்து கோவில்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பதிபந்தா ஷர்மா கூறுகையில்:-
இந்த சிலையை முழுவதுமாக ஒரே கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இந்த சிலையின் மொத்த எடை 45 டன்கள் ஆகும். தற்போது இந்த ஹனுமான் சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளதையடுத்து கொரோனா வைரஸுக்கான சஞ்சீவி மருந்தை ஹனுமான் எங்களுக்கு அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.