அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதத்திற்கு மேலாகப் பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது இந்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வார இறுதிக்குள் 30 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூசி வினியோக திட்டங்களை கவனிக்கும் மூத்த ராணுவ அதிகாரி குஸ்டாவ் பெர்னா தெரிவித்துள்ளார்.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்தில் ஏற்கெனவே மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. மேலும், பக்ரைன், சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்தத் தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.